‘‘வயிற்றை வலிக்கிறதா? ‘அல்ச’ராகத்தான் இருக்கும். ஒரு ‘ஜெலுசில்’ போட்டுக்கோ, சரியாகிவிடும்.’’ - பத்து வருடங்களுக்கு முன்னால் வயிற்றுவலி வந்தவர்களுக்கு இப்படித்தான் இலவச மருத்துவ ஆலோசனை கூறுவார்கள். இன்றைக்கு இந்த ஆலோசனை இப்படியாக மாறி இருக்கிறது. ‘‘அல்சர் வலிக்கு ‘பேன்டபிரசோல்’ (Pantoprazole) மாத்திரை போட்டுக்கொண்டால் சரியாகிவிடும்!’’
அது என்ன பேன்டபிரசோல்?
நம் இரைப்பையில் ஏற்படுகிற அழற்சியையும் புண்ணையும் குணப்படுத்துகிற மருந்து, பேன்டபிரசோல்; இப்போதுள்ள அல்சர் மருந்துகளில், பக்க விளைவுகள் அவ்வளவாக இல்லாத, வயிற்றுவலியை உடனே கட்டுப்படுத்துகிற அற்புத மருந்து இது; மாத்திரையாகவும் ஊசியாகவும் கிடைக்கிறது. பேன்டபுரசோல் அல்சரை எப்படிக் குணப்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அல்சர் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிமானம் ஆவதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் தேவை.
இரைப்பைச் சுவர்களில் நிறைய அமிலச் சுரப்பிகள் உள்ளன. இவற்றில் உள்ள பெரைய்ட்டல் செல்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சுரக்கின்றன; சீஃப் செல்கள் பெப்சினைச் சுரக்கின்றன. இந்த இரண்டும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் சுவற்றில் உள்ள மியூக்கஸ் படலம் வீங்கிவிடும். இதை ‘இரைப்பை அழற்சி’ (Gastritis) என்கிறோம். இதற்கு சிகிச்சை பெறத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறி விடும்.
காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துவது, புகைபிடிப்பது, கோலா, காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது,பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.
சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.
மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. நேரம் தவறி சாப்பிடுபவர்களுக்கும், காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இந்த நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி உண்டாகும். இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.
பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர்.இந்த இரண்டு அல்சர்களுக்கும் நல்லதொரு தீர்வு தருகிறது பேன்டபுரசோல்.இதை அமெரிக்காவில் அட்லான்டா நகரத்தில் இயங்கி வரும் பைக் குல்டென் (Byk Gulden) எனும் மருந்து நிறுவனம் கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னால் அல்சரைக் கட்டுப்படுத்த சிமெட்டிடின், ரேனிட்டிடின், ஃபெமோட்டிடின் என்ற மருந்துகள் கொடுக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது.
1973ல் கிளாக்சோ நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிளாக் என்பவர் அல்சரைக் குணப்படுத்த புதிய வழியைக் கண்டுபிடித்தார். இரைப்பையில் உள்ள பெரைய்ட்டல் செல்களை, ஹிஸ்டமின், கேஸ்ட்ரின், அசிடைல்கொலின் எனும் மூன்று வேதிப்பொருள்கள் தூண்டும்போதுதான் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அந்த செல்கள் சுரக்கின்றன.
எனவே இந்தத் தூண்டும்பொருள்களைக் கட்டுப்படுத்தினால் அமிலச் சுரப்பு குறைந்துவிடும் என்ற அடிப்படையில் ‘சிமெட்டிடின்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்தார். அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் பிரட்ஷா (John Bradshaw) என்பவர் ரேனிட்டிடின் என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்.
‘இவை இரண்டும் இரைப்பையில் உள்ள ஹிஸ்டமின் ஏற்பான்களுக்குள் ஹிஸ்டமின் நுழைவதைத் தடுத்துவிடும் என்பதால் அமிலம் சுரப்பது குறைந்துவிடும்; இரைப்பைப் புண் குணமாகும்’ என்றனர்.
ஆனால், இந்த மருந்துகளால் இரண்டு சிரமங்கள் உண்டாயின. ஒன்று அல்சர் குணமாக தாமதமானது. அடுத்து, அல்சரிலிருந்து ரத்தம் கசிந்தால் உடனே அதை நிறுத்த முடியவில்லை. இதனால் அல்சருக்கு வேறு சிறந்த மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1977ல் ஜார்ஜ் சாச், ஜான் ஃபர்ட் எனும் இருவர் ‘இரைப்பையில் அமிலம் சுரக்கிற சுழற்சிப்படிகளின் இறுதியில் ‘ஹைட்ரஜன், பொட்டாசியம் ஏடிபேஸ்’ (H+ K+ ATPase) எனும் என்சைம்தான் முக்கியமாக ஈடுபடுகிறது. இதைத் தடுத்துவிட்டால், அமிலம் சுரப்பது கட்டுப்படும்’ என்ற புதிய கருத்தைத் தெரிவித்தனர்.
இந்த என்சைமுக்கு ‘புரோட்டான் பம்ப்’ என்று பெயரிட்டனர். இந்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து 1979ல் சுவீடன் நாட்டில் ஹசல் நிறுவனம் ‘ஓமிபிரசோல்’ என்ற மருந்தைத் தயாரித்தது.
இதுதான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புரோட்டான் பம்ப் தடுப்பு மருந்து. இதன் வேதிப்பண்பைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்த பைக் குல்டென் நிறுவனம், இதன் வேதிக்கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்து 1986ல் பேன்டபிரசோல் மருந்தைக் கண்டு பிடித்தது. ஆனால், 1994ல்தான் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைமுறையில் மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலோருக்கு அல்சர் வருகிறது. இந்தவகை அல்சரைக் குணப்படுத்தும் ஆற்றல் மற்ற அல்சர் மருந்துகளைவிட பேன்டபுரோசலுக்குத்தான் அதிகம். ரத்தக் கசிவுள்ள அல்சரைக் கட்டுப்படுத்துவதிலும் இதுவே முதலிடம் வகிக்கிறது.

No comments:
Post a Comment