தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் வினவியபோது, சேவைக்கான தேவையை கருத்திற்கொண்டு அமைச்சின் செயலாளரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவினோம்.
சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒருவர் இல்லாமையால் அந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கியதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறை சவலக்கடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக தேர்தல் போஸ்டர் ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சியொன்றின் 10 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போஸ்டர்கள் மற்றும் வாகனம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக சவலக்கடை பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment